திருச்செந்தூர் கோவில் பகுதியில் அதிகரிக்கும் கடல் அரிப்பு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதால் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும்.
திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் சுமார் 200 அடி தூரத்துக்கு 8 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் அலைகளும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடலில் புனித நீராடும் பக்தர்கள் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
புதன்கிழமை இரவு முதல் கோவில் அருகில் மேலும் கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு கரடுமுரடான வெளிர் நிற பாறைகள் வெளியே தெரிகின்றன. இதனால் அப்பகுதியில் புனித நீராடும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
பாறைகளில் நின்று புனித நீராடுவதால் பக்தர்கள் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனினும் சிலர் ஆபத்தை உணராமல் பாறைகளில் நின்று செல்பி எடுக்கின்றனர். சிறுவர்கள் ஓடி விளையாடுகின்றனர். இதனை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.