தூத்துக்குடியில் ரூ.32½ கோடி செலவில் மினி டைடல் பூங்கா; மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி வந்தார். சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு வாகைகுளம் விமான நிலையத்துக்கு மதியம் வந்தார்,
விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், சபாநாயகர் அப்பாவு, ஆட்சியர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் மற்றும் கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சத்யாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்துள்ள நியோ டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..
ரூ.32½ கோடி செலவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மாலை 5 மணிக்கு மாணிக்கம் மஹாலில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.. நிகழ்ச்சி முடிந்ததும் இரவில் தூத்துக்குடி சத்யா ரிசார்ட்சில் முதல்-அமைச்சர் தங்குகிறார்
நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன்பெறுவர். இந்த திட்டம் வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவிகளிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பதாக அமைந்துள்ளது.
முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரின் பிரதான சாலைகளின் இருபுறமும் தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் காமராஜ் கல்லூரியில் பிரமாண்ட பந்தல் மற்றும் கல்லூரி முன்பாக அலங்கார வளைவு, தோரணம் அமைக்கப்பட்டு உள்ளது.