கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா


கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு இந்திரா காலனி பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்தப் பட்டாக்கள் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மனுக்கள் அளித்தும், போராட்டம் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைக் கண்டித்து நேற்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மந்தித்தோப்பு இந்திரா காலனி பகுதி மக்கள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். இளைஞர் பெருமன்ற நகர தலைவர் செந்தில் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகரத் துணைச் செயலாளர் அலாவுதீன், தாலுகா உதவி செயலாளர் ராமகிருஷ்ணன், மாதர் சங்க நகரச் செயலாளர் விஜயலட்சுமி மற்றும் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அலுவலகத்துக்குள் சென்று அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் சரவணபெருமாள் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், கிராம கணக்கில் பதிவேற்றம் செய்வது தொடர்பாகவும் நிலத்தின் வகைப்பாட்டை மாற்றுவது தொடர்பாகவும் கோட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. என்றார்.
இதனை கிராம மக்கள் ஏற்க மறுத்ததால் வட்டாட்சியருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மீண்டும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர், ஜனவரி மாதத்துக்குள் பட்டாக்களை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
