`திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908’ ஆய்வு நூலை எழுதிய ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908” ஆய்வு நூலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில், நாட்டில் உள்ள 21 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு 8 கவிதைப் புத்தகங்கள், 3 நாவல்கள், 2 சிறுகதைகள், 3 கட்டுரைகள், 3 இலக்கிய விமர்சனங்கள், 1 நாடகம் மற்றும் 1 ஆய்வு நூல் ஆகியவற்றுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது பெறுவோருக்கு ஒரு பதக்கம், ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான விருதாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
அதில், தமிழ் பிரிவில் திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் – 1908 என்ற ஆய்வு நூலை எழுதிய தமிழ் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908- என்ற நூல் 1908ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி வ.உ.சி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையின் தொடர்ச்சியாக மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சி குறித்தும், அதன் விளைவுகளையும் இந்த நூல் விரிவாக ஆராயும் வகையில் அமைந்திருக்கிறது.
திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சியும் 1908 நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு துறை தலைவர்களும் எழுத்தாளர்களும் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
