காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல் த.மா.கா.மாவட்ட தலைவர் உள்பட 38 பேர் கைது


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம் விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது மட்டுமின்றி, விவசாய பயிர்களை முற்றிலுமாக நாசப்படுத்தி வருகின்றன,
இதனால் விவசாயிகள் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டுப் பன்றிகள் சில சமயங்களில் விவசாயிகளையும் தாக்க தொடங்கியுள்ளன.. இதனால் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலத்திற்கு செல்வதற்கே பயப்படும் நிலை உருவாகி உள்ளது.
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், காட்டுப்பன்றிகள் தாக்கி காயம் அடைந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் அறிவித்து இருந்தனர்,
அதன்படி த.மா..கா. வடக்கு மாவட்ட தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் எட்டயபுரம் அருகே மதுரை நெடுஞ்சாலையில் வெம்பூர் பகுதியில் நேற்று காலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மறுபகுதியில் மட்டும் சென்றன. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்ட குழுவினர் கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
சாலை மறியலை யொட்டி போலீசார் அதிக அளவில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். மறியல் நடத்த அனுமதி கிடையாது, அமைதியாக கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் எச்சரித்தனர்.
\இருப்பினும் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாததால் அவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினார்கள். தயார் நிலையில் இருந்த ப போலீஸ் வேனில் அவர்களை ஏற்றினார்.
த.மா.கா.வடக்கு மாவட்ட தலைவர் கே.பி.ராஜகோபால் உள்பட 38 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள வேனில் ஏற்றி அந்த பகுதியில் ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
