பன்றிகளிடமிருந்து பாதுகாப்பு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு


பன்றிகளிடமிருந்து விவசாயிகளையும், விளை பொருட்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாயிகளையும், விளை பொருட்களையும் அழிக்கும் பன்றிகளிடமிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் விளைந்த பயிர்களை பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதுடன் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். பன்றிகளால் காயம்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மருத்துவ உதவித் தொகை வழங்க வேண்டும். பன்றிகள் தாக்கி உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் குடும்ப வாழ்வாதாரத் தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் லெனின்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் பிச்சையா, துணைத்தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இணைச்செயலாளர் நல்லையா, மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தாலுகா செயலாளர்கள் ரவீந்திரன்,வேலாயுதம், தாலுகா தலைவர்கள் வேலுச்சாமி, சந்திரமோகன், மாவட்டக்குழு உறுப்பினர் எட்டப்பன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் சேதமடைந்த பயிர்களுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
