தொடர் மழையினால் கண்மாய்கள் நிறைந்து கோவில்பட்டியில் வெள்ளப்பெருக்கு; இளையரசனேந்தல் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு


வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை மிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை பகலிலும் நீடித்தது, அன்றைய தினம் இரவிலும் பலத்த மழை பெய்தது.
இடைவிடாது இரவு பகலாக பெய்த மழை காரணமாக கோவில்பட்டி மற்றும் சுற்றுப்ப்புற கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கோவில்பட்டி நகர் பகுதியிலும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது,
கோவில்பட்டி நகரை சுற்றி உள்ள அத்தை கொண்டான், மூப்பன்பட்டி போன்ற கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன. கண்மாய் தண்ணீர் வரும் வழிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் காரணமாக தண்ணீர் அடுத்தடுத்த கண்மாய்களை நோக்கி செல்ல முடியாமல் கோவில்பட்டி ஊருக்குள் புகுந்தது., இதனால் கோவில்பட்டியில் இன்று அதிகாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோவில்பட்டி நகரின் முக்கிய பகுதியான இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஜெயஸ்ரீ மருதுவமனைக்கு பின்புறம் உள்ள கண்மாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் கால்வாயில் செல்ல முடியாமல் சாலையில் பாய்ந்து வெள்ளப்பெருக்கு எடுத்து ஆறு போல் ஓடியது.
ஒவ்வொரு ஆண்டும் கன மழையின் போது இந்த நிலை ஏற்படும். இதை தடுக்க சாலையின் இருபுறமும் சில மாதங்களுக்கு முன்பு வாறுகால் வசதி செய்யப்பட்டது. அனால் அதற்குள் தண்ணீர் செல்வதற்கு ஏற்படுத்திய வழிகளை ஆக்கிரமிப்புகள் அடைத்து கொண்டன.
இதன் காரணமாக தண்ணீர் போக வழியின்றி சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . அந்த சமயத்தில் இந்த் சாலையில் வந்த ஒரு பஸ் வெள்ளத்தில் சிக்கிகொண்டது.மேலும் அரசு பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியே வர முடியவில்லை.
இந்த பகுதியில் உள்ள டி.வி.எஸ். இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் சுற்றி தண்ணீர் தேங்கியதால் இன்று விடுமுறை விடப்பட்டது. மேலும் அருகாமையில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளும் திறக்கப்படவில்லை.
மேலும் இந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வெள்ளம் புகுந்ததால் பெட்ரோல், டீசல் மெஷின்கள் பாதிக்கப்பட்டன. இதனால் அங்கு சேவை நிறுத்தப்பட்டது.
இந்த சாலையில் வெள்ள நீர் பாய்ந்து சென்றதால் போக்குவரத்து துண்டிக்கபப்ட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன, காலை நேரத்தில் இந்த சாலை வழியாக கோவில்பட்டி நகருக்குள் சென்றவர்கள் இனாம் மணியாச்சி, லட்சுமி மில் பாலம் வழியாக சுற்றி சென்றனர்.
மூப்பன்பட்டி கண்மாய் நிரம்பி வெளியேறிய தண்ணீர் ரெயில்நிலையத்தின் பின்புற பகுதியை நோக்கி சென்று தேங்கியது.
இதற்கிடையே இளையரசனேந்தல சாலையில் வெள்ள நீரை அகற்றும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர், ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் போக செய்தனர்., இதனால் படிப்படிபாக வெள்ள நீர் வடிந்தது.
இதே போல் கோவில்பட்டி நகருக்குள் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்றும் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
