பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி

பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், புயல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் அழைத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். டி.பி.சத்திரத்தை சேர்ந்த 250 குடும்பங்களை சென்னை பனையூரில் உள்ள இல்லத்திற்கு வரவழைத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் தனித்தனியாக குறைகளை கேட்டறிந்தார்.
