• June 6, 2025

வன்முறையை தடுக்க மசூதி ஆய்வை உடனே நிறுத்துங்கள்: அமித்ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்

 வன்முறையை தடுக்க மசூதி ஆய்வை உடனே நிறுத்துங்கள்: அமித்ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஜாமா மஸ்ஜித் மசூதி ஒன்று உள்ளது. மிகவும் பழமையான இந்த மசூதி, இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்பல் மசூதி விவகாரத்தில் நடைபெற்ற வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனா். இதனால் அம்மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜித்தின் கீழே இந்து கோவில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த கோரி உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எம்.பி.திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

அமித்ஷாவுக்கு எம்.பி.திருமாவளவன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜித்தின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.

வன்முறை மேலும் அதிகரிப்பதை தடுக்கவும், வழிபாட்டு தலங்கள் சட்டம், 1991-ஐ பின்பற்றுவதை உறுதி செய்யவும் சம்பல் ஜாமா மஸ்ஜித்தில் அனைத்து ஆய்வு நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். சம்பலில் சிறுபான்மை சமூகத்தினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளை பாதுகாக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நவம்பர் 24 சம்பவங்கள், குறிப்பாக போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் காவல்துறையின் தவறான நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும் தேசத்தின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை தடுப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக ஒன்றிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *