கேரளாவுக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு: கோவில்பட்டி அருகே 10 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல்

கோவில்பட்டி அருகே கயத்தாறு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து கயத்தாறு தாசில்தார் சுந்தரராகவன் தலைமையில் வருவாய்த் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெள்ளாலங்கோட்டை பகுதியில் சென்ற மினி லாரியை சோதனையிட முயன்ற போது, மினி லாரி நிற்காமல் வேகமாக சென்றது.
அதிகாரிகள் பின் தொடர்ந்து சென்ற நிலையில் அங்குள்ள ஹரிஹர பெருமாள் கோவில் முன்பு மினிலாரியை நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் லாரியில் இருந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து அதிகாரிகள் சோதனை செய்த போது தேங்காய்களுக்கு மத்தியில் மறைத்து வைத்து ரேஷன் அரிசி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியில் 40 கிலோ எடையுள்ள 250 பைகளில் சுமார் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இந்த ரேஷன் அரிசி கேரளா கொண்டு செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 10டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு உதவி ஆய்வாளர் அரிக் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.
இதன் மூலம் கேரளாவுக்கு 10 டன் ரேஷன் அரிசி கடத்தல் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம் தப்பி ஓடிய கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
