இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது குண்டு வீச்சு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் அருகே 2 வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள நகரம் கேசேரியா. இந்த நகரில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை குறிவைத்து அடையாளம் தெரியாத கும்பல் சனிக்கிழமை இரவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடந்தபோது நெதன்யாகு மற்றும் அவரின் குடும்பத்தினர் யாரும் அந்த வீட்டில் இல்லை.
மேலும் வீசப்பட்ட வெடிகுண்டுகள் நெதன்யாகுவின் வீட்டின் அருகே புல்வெளியில் விழுந்து தீப்பிடித்தன. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த சம்பவம் அனைத்து சிவப்பு கோடுகளையும் கடந்துவிட்டது.” ஈரான் மற்றும் அவரை கொல்ல முயற்சிக்கும் நபர்களிடம் இருந்து வரும் அச்சுறுத்தலுக்கு உள்ளான இஸ்ரேலிய பிரதமருக்கு, உள்நாட்டில் இதேபோன்ற அச்சுறுத்தல்களை பெறுவது சாத்தியமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அக்டோபரில் இதே பாணியில் ஹிஸ்புல்லா அமைப்பினர், நெதன்யாகுவின் வீட்டின் அருகே டிரோன் தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நெதன்யாகு வீட்டின் முன் குண்டு வீசப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
