கங்குவா மீது ஏன் இவ்வளவு எதிர் விமர்சனங்கள்: ஜோதிகா ஆதங்கம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ‘கங்குவா’. யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருக்கிறார்.
3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா படமானது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் வெளியானது. இது 38 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஒரு தரப்பு படம் நன்றாக இருக்கிறது என்றாலும், மறுதரப்போ படம் சுமார் என்றே தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் நடிகை ஜோதிகா கங்குவா திரைப்படத்திற்கு ஆதரவாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில் நடிகை ஜோதிகா கூறியிருப்பதாவது:-
இந்த பதிவை சினிமா ரசிகையாக மட்டுமே எழுதுகிறேன்.. சூர்யாவின் மனைவியாக எழுதவில்லை. கங்குவா திரைப்படத்தை நல்ல திரைப்படமாகவே பார்க்கிறேன். இதற்காக, சூர்யா கண்டிப்பாக பெருமைப்பட வேண்டும்.
நிச்சயமாக முதல் அரை மணி நேரத்திற்கு ஒலி பிரச்னை இருந்தது. இதற்காக முழு படத்தையும் குறை சொல்லுவதை ஏற்று கொள்ளவே முடியவில்லை. எதிர்மறை விமர்சனங்கள் ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனெனில், மிக பழைய கதைகளுடனான அறிவுக்கு மாறான பெரிய பட்ஜெட் படங்களுக்கோ, பெண்களை பின் தொடருதல், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த, அதிகம் சண்டை காட்சிகள் நிறைந்த படங்களுக்கோ இந்த அளவிற்கு விமர்சனம் செய்யப்படவில்லை.
முதல் நாளிலேயே, அதிலும் முதல் ஷோ முடிவதற்கு முன்பே கங்குவாவுக்கு இத்தனை எதிர்மறை விமர்சனங்கள் வந்தது வருத்தமளிக்கிறது. கங்குவா படக்குழுவினர் பெருமையாக இருங்கள். எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்கள் அதை மட்டும்தான் செய்கிறார்கள். சினிமாவை உயர்த்துவதற்கு வேறொன்றையும் அவர்கள் செய்யவில்லை. இவ்வாறு ஜோதிகா கூறியுள்ளார்.
