வந்தே பாரத்: சாம்பாரில் வண்டு- உணவு சப்ளை செய்த நிறுவனத்துக்கு அபராதம் விதித்த தெற்கு ரெயில்வே

சென்னை எழும்பூர் – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயிலில் நேற்று முன் தினம் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதில் சாம்பாரில் வண்டுகள் கிடந்ததாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். உணவில் வண்டுகள் கிடந்ததை அடுத்து, பயணிகள், ரெயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சாம்பாரில் வண்டுகள் கிடப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.
இது குறித்து மத்திய அமைச்சகம் மற்றும் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகன் என்ற பயணி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரெயிலில், உணவு பொட்டலத்தில் வண்டு இருந்த விவகாரம் தொடர்பாக தென்னக ரெயில்வே விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், உணவு பொட்டலம் விநியோகம் செய்த பிருந்தாவன் புட் ப்ராடக்ட் நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி, உணவின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பயணியின் புகாரை தொடர்ந்து உடனடியாக ரெயிலிலிருந்து அனைத்து உணவு பொட்டலங்களும் ஆய்வு செய்யப்பட்டதுடன், ரெயிலின் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கும் இடமும் ஆய்வு செய்யப்பட்டதில் எந்த குறைபாடும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்வதில் ரெயில்வே நிர்வாகம் உறுதியாக உள்ளது. ரெயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் கண்காணித்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
