திரிபுராவில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப கட்டுப்பாடு: பைக்கிற்கு ரூ.200 மட்டுமே அனுமதி

திரிபுரா மாநிலத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் ரெயில்கள் இயக்க முடியாததால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் அனைத்தும் ரெயிலில்தான் வருகிறது. ரெயில்களில் கொண்டு வரப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கரில் சேமிக்கப்பட்டு பின்னர் எரிவாயு நிலையங்களுக்கு அனுப்பப்படும்.
ஆனால் தற்போது, ரெயில் தண்டவாளம் விபத்தில் சிக்கி உள்ளதால் வேறு எந்த ரெயிலும் அம்மாநிலத்திற்குள் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே இருக்கும் பெட்ரோலை தான் அரசு மக்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. ரெயில் தண்டவாள பிரச்சனை சரியாகும் வரை அனைவருக்கும் பெட்ரோல் கிடைப்பதை உறுதி செய்ய அம்மாநில அரசு ரேஷன் முறையை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி ஒவ்வொரு வாகனங்களுக்கும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும். இரு சக்கர வாகனத்திற்கு தினமும் ரூ.200 பெட்ரோல் மட்டுமே கிடைக்கும். ஆட்டோகளுக்கு தினமும் ரூ.400 , கார் இருந்தால் ரூ.1000 பெட்ரோல் வாங்கலாம். அனைவருக்கும் போதுமான பெட்ரோல் கிடைக்கும் வரை இந்த விதிகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசு வாகனங்கள் மற்றும் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் முன்பு போலவே, தங்களுக்கு தேவையான அளவுக்கு பெட்ரோல் பெறலாம். இந்த விதிகள் தனியார் வாகனங்கள் மற்றும் சில பொது போக்குவரத்து வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
திரிபுராவின் உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி இது பற்றி கூறுகையில், மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் பிரச்சனைக்கு உதவும் வகையில் பெட்ரோல் நிரப்பப்பட்ட லாரிகள் விரைவில் வரும். ரெயில் விபத்தால் ஏற்பட்ட பிரச்சனை விரைவாக சரி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சில பெட்ரோல் லாரிகள் ஏற்கனவே மாநிலத்திற்கு வந்துள்ளன. விரைவில் எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று உறுதியளித்தார்.
