அடுத்த 10 ஆண்டுகள் தான் என்னுடைய சினிமா வாழ்க்கை: அமீர் கான்

பாலிவுட் நடிகர் அமீர் கான் திரையுலகில் தனது அடுத்தகட்டம் குறித்து மனம் திறந்துள்ளார். இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அமீர் கான். தனது படங்களில் வித்தியாச முயற்சியை மேற்கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘லால் சிங் சத்தா’ திரைப்படம், பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கையின் அடுத்தகட்டம் குறித்து அமீர் கான் மனம் திறந்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளே சினிமாவில் இருப்பேன் என அதிரடியாக கூறியுள்ள அமீர் கான், 10 வருடத்தில் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளேன் என்றும் வெளிப்படுத்தியுள்ளார்.
சினிமாவில் விலக எடுத்த முடிவுக்கு என்ன காரணம் என்பதையும் அமீர் கான் விளக்கியுள்ளார்.
லால் சிங் சத்தா படத்தின் போதே ஓய்வு முடிவை எண்ணினேன். கொரோனா சமயத்தில் நான் ஒன்றை உணர்ந்தேன். 18 வயது தொடங்கி தற்போது வரை என்னுடைய இளமை காலம் முழுவதையும் சினிமாவில் கவனம் செலுத்துவதில் மூழ்கிவிட்டேன்.
ஆனால், தனிப்பட்ட எனது குடும்ப வாழ்க்கைக்காக நேரம் செலவழிக்கவில்லை. எனது மனைவிகள் இருவருடனும் சரி, குழந்தைகளுடனும் சரி நேரம் செலவிட்டதே இல்லை. இவை, கொரோனா காலத்தில் என்னை எமோஷனலாக மாற்றியது. குடும்பத்தை கவனிக்கவில்லை என்பதை மோசமாக உணர்ந்தேன். இதனால் குற்ற உணர்வு என்னை உறுத்தியது.
எனவே, இனி குடும்பத்துக்காக நேரம் செலவழிக்க வேண்டும் என இந்த முடிவை எடுத்தேன். நல்ல வேலை 56 வயதில் இந்த முடிவை எடுத்தேன்.
இனி அடுத்த 10 ஆண்டுகள் தான் என்னுடைய சினிமா வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளாக இருக்கும். இதில் 6 படங்களில் நடிக்கவுள்ளேன். இதில் இந்த காலகட்டத்தின் தலைசிறந்த இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பணிபுரிவேன் என்று கூறி ஓய்வை அமீர்கான் அறிவித்துள்ளார் . இந்த முடிவு அவரின் ரசிகர்களை கவலைகொள்ள செய்துள்ளது.
