ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீது கனரா வங்கி புகார் அளித்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தை மீட்டெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதற்கு தேசிய சட்ட நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் வழக்கின் விசாரனை நிறைவடைந்த நிலையில், திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டு உள்ளது.
அதில்., கடந்த 5 ஆண்டுகளாக தீர்வு காண முடியாததால் திட்டம் தோல்வியடைந்தது. தற்போதைய மோசமான நிதி சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க வேண்டும். கடன்களை அடைக்க ஒருவரை நியமிக்க வேண்டும். கடன்களை திருப்பி செலுத்த நடவடிக்கைகளை தேசிய சட்ட நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடங்க வேண்டும். இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
