ஐபிஎல் மெகா ஏலம்-நடைபெறும் இடம், தேதியை அறிவித்த பிசிசிஐ

ஐபிஎல் 18-வது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம்முறை மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் வருகிற 24 மற்றும் 25-ம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. மொத்தம் 1,574 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கு பெற உள்ளனர். அதில் 1165 பேர் இந்தியர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
இந்த ஆண்டு ஏலத்தில் கூடுதல் சிறப்பாக பல இந்திய நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் இடம் பெற உள்ளனர். ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், இஷான் கிஷன் என்று இந்திய அணிக்காக ஆடி வரும் பிராண்ட் வேல்யூ கொண்ட வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இதனால் மெகா ஏலத்தில் எந்த வீரர் எந்த அணியால் வாங்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. ஐபிஎல் ஏலம் தொடர்ந்து 2-வது முறையாக வெளிநாட்டில் நடக்கவுள்ளது. மொத்தமாக 1574 வீரர்கள் ஏலத்திற்கு வந்தாலும் அணிகளுக்கு 204 வீரர்கள் மட்டுமே தேவைப்படுகிறார்கள். இந்த மெகா ஏலத்திற்காக பல அணிகளும் மாதக்கணக்கில் முன் தயாரிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.
சில அணிகள் தங்களுக்குள்ளாகவே ஒரு மாதிரி ஏலத்தை நடத்தி பார்த்து வியூகங்களை வகுத்து வருவதாகவும் சொல்கிறார்கள். இருப்பதிலேயே அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம்தான் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய்க்கு மேல் கையிருப்பு தொகை உள்ளது. அதனால் பஞ்சாப் அணி உள்ளே புகுந்து பல அணிகளின் வியூகங்களை உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஆச்சரியம் என்னவெனில் 2014-ல் கடைசியாக டி20 போட்டியில் ஆடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் ஏலத்தில் தன் பெயரையும் பதிவு செய்துள்ளார் என்பதே. மாறாக அணிகள் தேடி பிடித்து போடும் ஒரு வீரரான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகியுள்ளார்.
