அடுத்ததாக பெரிய சோதனைகள் காத்திருக்கின்றன: இந்தியாவின் தோல்வி குறித்து யுவராஜ் சிங்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்படி நடைபெற்ற இந்த தொடரில் நியூசிலாந்து பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் 113 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
இதனையடுத்து மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 147 ரன் இலக்கை கூட விரட்டி பிடிக்க முடியாமல் இந்திய அணி தோல்வி கண்டது. இதனால் நியூசிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது.இதனால் எளிதில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது. எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் 4 போட்டிகளில் (5 போட்டி கொண்ட தொடர்) கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக ஆஸ்திரேலிய தொடரில் பெரிய சோதனைகள் காத்திருக்கின்றன. என்று முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் இந்தியாவின் தோல்வி குறித்து தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- “கிரிக்கெட் உண்மையிலேயே ஒரு தாழ்மையான விளையாட்டு இல்லையா? டி20 உலக கோப்பையை வென்ற சில மாதங்களுக்கு பின் நாம் ஒரு வரலாற்று ஒயிட்வாஷ் தோல்வியை எதிர்கொள்கிறோம். அதுதான் இந்த விளையாட்டின் அழகு. அடுத்ததாக ஆஸ்திரேலிய தொடரில் பெரிய சோதனைகள் காத்திருக்கின்றன. இது சுய பரிசோதனை செய்து கற்றுக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கான வழி. சிறப்பாக விளையாடி வரலாற்று வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துகள்” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
