மெய்யழகன் படத்தை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில், 2டி நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. திரையரங்கில் வெளியாகி வரவேற்பினை பெற்ற நிலையில் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஓடிடி தளத்தில் ‘மெய்யழகன்’ படத்தைப் பார்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், படகுழுவினருக்கு தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார்.
இப்படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம். எனது சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக எனக்குள் கொண்டுவந்த படம். நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் சி.பிரேம்குமார் பார்வையாளர்களை உறவுக்கூட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். இந்த பீல் குட் படத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்று நெகிழ்ச்சியாக பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.
