புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுகவை எதிர்க்கின்றனர்: மு.க.ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி மதிப்பில் முதல்வர் பதிப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ மூலம் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- எல்லா வகையிலும் தமிழக மாணவர்களை உயர்த்துவோம். இது தான் திராவிட மாடல் அரசின் நோக்கம். நீட் தேர்வு அனிதாவின் கனவை சிதைத்துவிட்டது. அவரது உயிரை பறித்துவிட்டது.
நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் குரலுக்கு மத்திய அரசு நிச்சயம் பணியதான் போகிறது. தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது.
ஆட்சியில் ஏதுவும் நடக்க வில்லை என சிலர் குறை சொல்கின்றனர். தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றி விட்டோம். தமிழக மாணவர்களுக்காக ஒவ்வொரு திட்டமாக அரசு பார்த்து பார்த்து செய்து வருகிறது.
நிதியை கூட ஒதுக்கிவிடலாம். ஆனால் கண்காணிக்க வேண்டும். திட்டங்களை முறையாக, கண்காணித்து நிறைவேற்றுகிறோம் என்பது நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறோம். திராவிட மாடல் அரசின் செயலால் தொழில்முனைவோர் தமிழகத்தை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள்.
புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என பேசுகின்றனர். திமுக வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் எதிர்க்கின்றனர். வாழ்க வசவாளர்கள் என அண்ணாதுரை கூறியதை நினைவில் வைத்து செயல்படுகிறோம். வசவாளர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
எங்கள் பணி மக்களுக்கானது. தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
