ஸ்பெயினில் பலத்த மழை- 217 பேர் பலி: பார்வையிட வந்த மன்னர் மீது சேற்றை வீசிய மக்கள்

ஐரோப்பிய நாடான ஸ்பெயின், 5 நாட்களாக பெய்த வரலாறு காணாத மழையில் தத்தளித்து வருகிறது. குறிப்பாக வேலன்சியா மாகாணம் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. அங்கு மட்டும் 217 பேர் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்க நினைத்து பார்க்க முடியாத இயற்கை சீற்றத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காஸ்டில்லா லா மஞ்ச்சா, அன்டாலுசியா ஆகிய மாகாணங்களை காட்டிலும் வேலன்சியா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு நிர்வாகம் எந்த மீட்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் பெருத்த சேதாரத்துக்கு உள்ளான வேலன்சியா மாகாணத்தில் உள்ள பைபோர்ட்டா நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மன்னர் பிலிப், ராணி லெட்டிசியாவுடன் சென்றார். அவர்களின் வருகைக்கு சேறும், சகதியுமாக இருந்த சாலைகள் சமன்படுத்தப்பட்டு இருந்தன. பாதுகாவலர்கள் புடைசூழ மன்னர் பிலிப், ராணியுடன் வந்த போது பாதிக்கப்பட்ட மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இருவரின் வருகையை கண்டு ஆத்திரம் அடைந்த அவர்கள், எதிர்ப்பு முழக்கமிட்டனர். ஆனாலும் பாதுகாவலர்களுடன் மன்னரும், ராணியும் வீதிகளில் நடந்து வர, அதிருப்தி அடைந்த மக்கள், திரும்பி போகுமாறு முழக்கமிட்டபடியே கீழே கிடந்த சேற்றை எடுத்து அவர்கள் மீது வீசினர். நொடி பொழுதில் இந்த சம்பவத்தால் மன்னர் பிலிப், முகம் மற்றும் ஆடைகள் சேறாகின.என்ன நடக்கிறது என்பதை கண்டு அதிர்ந்த பாதுகாவலர்கள் அவரை மேலும் முன்னேறவிடாமல் அரணாக காக்க, அவர்களை விலக்கி கொண்டே மக்களை மன்னர் பிலிப் அணுகினார். எதிர்ப்பை மீறி வந்த மன்னரை கண்டு ஆத்திரத்தின் உச்சிக்கே போன மக்கள், அவரை கடுமையாக திட்டி தீர்த்தனர். அவர்களை சமாதானப்படுத்திய மன்னர் பிலிப், மெதுவாக அங்கிருந்து தமது பாதுகாவலர்களுடன் நடந்து சென்றார். மன்னர் மீது சேற்றை வாரியிறைத்த மக்களின் ஆத்திரம், அந்நாட்டில் பரபரப்பான விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
