கொளத்தூரில் முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ், படிப்பதற்கான நூலகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ள முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கொளத்தூரில் உள்ள ஜெகன்நாதன் தெருவில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பெயரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் கட்டப்பட்டுள்ளது. இந்த படைப்பகத்தில் ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. படிப்பிற்கு தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் படைப்பகத்தில் படிக்க ஒரு தளம், பணியாற்ற ஒரு தளம், உணவு சாப்பிட ஒரு தளம் என 3 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ரூ.5 மற்றும் ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவசமாக அனுமதிக்கப்பட்டால் பொழுதுபோக்கு கூடமாக மாறிவிடக்கூடும் என்பதற்காக இந்த குறைந்தபட்ச கட்டணம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி செய்வதற்காக கோ- ஒர்க்கிங் ஸ்டேஷன் எனப்படும் ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 38 நபர்கள் ஒரே நேரத்தில் பணியாற்றலாம். இது பெரிய பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்படாது, பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு இந்த பணியிடத்தை பகிரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கும் குறைந்த அளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
மேலும், இதில் 3 கலந்தாய்வு கூடங்கள் அமைக்கப்படுகின்றன. கலந்தாய்வு கூடங்களில் இரண்டில் தலா 4 பேரும், ஒன்றில் 6 பேரும் அமர்ந்து பணியாற்ற முடியும்.
இதனையடுத்து, பெண்கள் கணினி கற்பதற்காக கொளத்தூரில் அமைக்கப்பட்டுள்ள அனிதா அகாடமியில் 13-வது பேட்ச்சாக பயிற்சி முடித்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கணினியை வழங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 105 பேருக்கு கணினியும், 360 பேருக்கு தையல் இயந்திரமும் வழங்குகிறார். இந்த அகாடமியின் மூலம் 2,000-க்கும் மேற்பட்டோர் பலனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
