நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட நிறங்கள் மூன்று ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் அதர்வா நடிப்பில் உருவான நிறங்கள் மூன்று திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன், அதர்வா முரளியுடன் இணைந்து உருவாக்கிய திரைப்படமான ‘நிறங்கள் மூன்று’ படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட நாள்களாக வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இதில் நடிகர்கள் சரத்குமார், ரஹ்மான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் அம்மு அபிராமி நாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.
தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கார்த்திக் நரேன் அரவிந்த் சுவாமியை நாயகனாக வைத்து இயக்கிய நரகாசூரன் படம் வெளியாகாமல் உள்ளது. அப்படத்தின் தயாரிப்பாளரான கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் கார்த்தி நரேனுக்கும் ஏற்பட்ட பிரச்னையே இதற்கு காரணம்.
இந்நிலையில், நிறங்கள் மூன்று திரைப்படம் வருகிற நவம்பர் 22-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
