டிஜிட்டல் கைது: நடப்பாண்டில் 10 மாதங்களில் ரூ.2,140 கோடி மோசடி

கடந்த 10 மாதங்களில் மோசடி கும்பல்களால் ரூ.2,140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு துறையின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.
சில மோசடி கும்பல்கள், பொதுமக்களிடம் டிஜிட்டல் கைது என்று கூறி, அவர்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். இந்த நிலையில், நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 92,334-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கைது மோசடிகள் நடந்துள்ளன.
அப்பாவி பொதுமக்களின் மீது பொய் புகார்களை கூறி, டிஜிட்டல் கைது செய்வதாகவும், பணம் கொடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டி, கொள்ளை சம்பவங்களில் மோசடி கும்பல்கள் ஈடுபட்டு வருவதாக மத்திய வெளியுறவு துறையின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.
மோசடி கும்பல்கள் கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும், குறிப்பாக கம்போடியா நாட்டில் உள்ள சீனாவுக்கு சொந்தமான சூதாட்ட விடுதிகளில் இருந்து தான் அதிகளவிலான மோசடி நடப்பதாக கூறுகின்றனர். இவர்கள் தங்களை காவல்துறை அதிகாரி, அமலாக்க இயக்குநரகம், சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்ற உயர்மட்ட இந்திய நிறுவனங்களின் அதிகாரிகளை போல காட்டி கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
மாதத்திற்கு சுமார் ரூ.214 கோடி மோசடி நடப்பதன் மூலம், கடந்த 10 மாதங்களில் ரூ.2,140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சைபர் பிரிவு தெரிவிக்கிறது. இதுபோன்ற மோசடி அழைப்புகள் வந்தாலோ, சந்தேகத்துக்கிடமான அழைப்புகளை பெற்றாலோ, உடனடியாக 1930 அவசர கால ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். உடனடியாக தெரிவிப்பதன் மூலம், இழந்த பணத்தினை உடனடியாக பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
