தீபாவளி அன்று திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதியில் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்றைய தினம் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவம் முடிந்து தற்போது ஐப்பசி மாத உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. தீபாவளி அன்று நடத்தப்படும் சிறப்பு உற்சவங்களுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் உள்ளது. இதனால் நவம்பர மாத உற்சவங்களுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தீபாவளி அன்று தீபாவளி அஸ்தனம் நடைபெறவுள்ளது.
இதனால் வழக்கமாக வியாழ கிழமைகளில் நடத்தப்படும் திருப்பாவாடை உற்சவம் ரத்து செய்யப்படுவதாக ஏற்கெனவே தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. தீபாவளி அஸ்தனம் காலை 7 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால் அன்றைய தினம் ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் போன்ற சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ஏற்கெனவே தேவஸ்தானம் அறிவித்துவிட்டது.
தீபாவளி பண்டிகை அன்று மாலை 5 மணியளவில் சகஸ்ர தீப அலங்கார சேவை நடத்தப்படவுள்ளதாகவும் இது நிறைவடைந்த பிறகு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அக்டோபர் 31-ம் தேதி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீபாவளிக்கு முந்தைய நாள் அக்டோபர் 30-ம் தேதி முதல் சுவாமி தரிசனம் மற்றும் தங்கும் இடம் போன்றவைகளுக்கு சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது. இவற்றை நினைவில் வைத்து கொண்டு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
புரட்டாசி மாதம் முடிந்தாலும் திருப்பதியில் கூட்டம் ஓய்ந்த பாடில்லை. தினந்தோறும் 50,000 முதல் 80,000 பேர் வரை பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். அது போல் உண்டியல் காணிக்கையும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி ரூபாய் வரை வசூலாகிறது.
