அக்டோபர் 30-ம் தேதி கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது பிறந்தநாள் விழா மற்றும் 62-வது குருபூஜை விழா கொண்டாடப்படுகின்றது. பசும்பொன்னில் உள்ள அவருடைய நினைவிடத்தில் குருபூஜை விழா நடைபெறும் இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருகை தருகின்றனர்.
மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் பசும்பொன் சென்று அஞ்சலி செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதனையடுத்து விழாவின் பொழுது ஆண்டுதோறும் ஒரு சில கட்டுப்பாடுகள் சிவகங்கையில் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், இளையான்குடி, சிவகங்கை, மானாமதுரை, காளையார் கோவில், ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் இயங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேவர் குருபூஜை முன்னிட்டு அக்டோபர் 30-ம் தேதி கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
