பிரபல தாதா பிஷ்னோயின் சகோதரர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு

பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய்யின் சகோதரர் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னாய் தற்போது குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் பாடகர் சித்து மூஸேவாலா, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் கொலை சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய்யின் கும்பல் பொறுப்பேற்றது நாட்டையே உலுக்கியது. ஹிந்தி நடிகர் சல்மான் கானை பலமுறை பிஷ்னோய் கும்பல் கொலை செய்ய முயற்சித்துள்ளது.
இந்நிலையில், லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர்.,பானு எனப்படும் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்துள்ளது.
அன்மோல் பிஷ்னோய் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 2022-ல் பஞ்சாப் பாடகர் சித்து மோசேவாலா கொலை வழக்கிலும் இவன் தேடப்பட்டு வருகிறான். கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நடிகர் சல்மான் கான் வீட்டின் வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மும்பை போலீசாரால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டான்.
பல்வேறு வழக்குகளில் என்ஐஏ-வால் தேடப்பட்டு வரும் குற்றவாளியும்.,லாரன்ஸ் பிஷ்னோய்யின் சகோதரருமான அன்மோல் பிஷ்னோய் மீது 2022-ம் ஆண்டில் இரண்டு குற்றப்பத்திரிகையை என்ஐஏ-வால் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் அன்மோல் பிஷ்னோய், போலி பாஸ்போர்ட் மூலம் கடந்த ஆண்டு கென்யாவுக்கு தப்பியோடிய நிலையில்., தற்போது கனடாவில் தஞ்சம் புகுந்துள்ளான். என தகவல்கள் தெரிவிக்கின்றன.
