வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, தனது வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், வரும் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார்.ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்களுடன் பிரம்மாண்ட வாகன பேரணியில் பிரியங்கா காந்தி ஈடுபட்டார். அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு தந்தனர். இதன் தொடர்ச்சியாக, கல்பெட்டாவில் பிரம்மாண்ட மாநாடு நடந்தது. இதில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா காந்தி, “தனக்காக முதன்முறையாக வாக்கு சேகரிப்பது வித்தியாசமான அனுபவம்” என்று கூறியுள்ளார். 17 வயதில் இருந்து பிரச்சாரம் செய்து வருகிறேன். எனினும், கடந்த 35 ஆண்டு கால பிரச்சார அனுபவத்தில் தனக்காக முதன்முறையாக வாக்கு சேகரிக்க வந்துள்ளதாகவும் கூறினார்.
மாநாட்டுக்கு பின், வயநாடு தொகுதியின் கல்பெட்டாவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரியங்கா காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கலின்போது கணவர் ராபர்ட் வதோரா மற்றும் மகன் ரேஹான் வதோரா ஆகியோர் பிரியங்கா காந்தி உடன் இருந்தனர்.
இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.
