• June 8, 2025

வேலூர் சிறையில் கைதி சித்ரவதை: டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட்

 வேலூர் சிறையில் கைதி சித்ரவதை: டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள மாணிக்கம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்று வந்த சிவக்குமாரை சிறைத்துறை டிஐஜி-யின் வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதோடு, டிஐஜி வீட்டில் இருந்த ரூ.4.25 லட்சம் பணம் காணாமல் போனதற்கும் சிவக்குமார் மீது சந்தேகப்பட்டு அவரை கடுமையாகத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக, சிவக்குமாரின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நேரில் விசாரணை நடத்தினார். இவரது அறிக்கையின் அடிப்படையில் சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். சிறையின் தனி அறையில் 100 நாள்கள் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சென்னை சிபிசிஐடி எஸ்.பி வினோத் சாந்தாராம் நியமிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 12-ம் தேதி, சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட கைதி சிவக்குமாரிடமும், மறுநாள் வேலூர் மத்திய சிறை அதிகாரிகளிடமும் நேரில் விசாரணை நடத்தினார் எஸ்.பி வினோத் சாந்தாராம்.

இதையடுத்து, சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி கடந்த மாதம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் சென்னை புழல்-2 சிறைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். சிறைத்துறை டிஜிபியும் வேலூர் சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, `கைதியை தாக்கிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டிஐஜி உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை., என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் சிறைத்துறை டி.ஜி.பி மகேஸ்வர தயாள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *