எங்கள் கூட்டணி பதவிக்காக அல்ல கொள்கைக்காக: மு.க.ஸ்டாலின்

முன்னாள் திமுக எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் இல்ல திருமணவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அவர் :- ”திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று சிலர் காத்திருப்பார்கள். அதுபோல இருக்கிறார். சென்னையில் மழை வந்தபோது சேலத்துக்கு ஓடி சென்று ஒளிந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் களத்தில் நின்றனர். தன் கட்சியை வளர்க்க முடியாதவர் அடுத்த கட்சியின் கூட்டணி எப்போது உடையும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுவதுதான் திமுகவின் நோக்கம். திமுக கூட்டணி உடைந்துவிடும் என கூறி எடப்பாடி பழனிசாமி ஜோசியராக மாறிவிட்டார். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்ற விரக்தியிலும், திமுகவின் செல்வாக்கு உயர்கிறதே என்ற ஆதங்கத்திலும் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். எங்கள் கூட்டணி பதவிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இல்லை., கொள்கைக்காக அமைக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் விவாதங்கள் இருக்கலாம், விரிசல் ஏற்படாது. “2026 மட்டுமல்ல அதற்கு பின் வரும் அனைத்து தேர்தல்களிலும் திமுகவே ஆட்சிக்கு வரும்”. என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
