ரூ.2000 கோடி வசூலித்த படம் தங்கல்: எங்களுக்கு வெறும் ரூ.1 கோடி மட்டுமே – பபிதா போகத் ஆதங்கம்

இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான், கிரண் ராவ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தங்கல். ஹிந்தியில் உருவான தங்கல் திரைப்படம் பிற மொழிகளிலும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. மல்யுத்தப் போட்டிகளை மையமாக வைத்து உருவான தங்கல் திரைப்படம், இந்தியாவில் பெரும் வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தங்கல் திரைப்படம் சீனாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவை விட சீனாவில் தங்கல் திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது. இதனால், தங்கல் படத்தின் மொத்த வசூல் தற்போது 2,000 கோடி ரூபாயை தாண்டி அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் தற்போது வரை முதலிடத்தில் உள்ளது.
அரியானாவில் மகாவீர் போகத் என்ற முன்னாள் மல்யுத்த வீரர் தனது 2 மகள்களுக்கு பயிற்சியளித்து அவர்களை மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றினார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் தங்கல் திரைப்படம் எடுக்கப்பட்டது.
அண்மையில் மகாவீர் போகத்தின் இளைய மகளும் பாஜக உறுப்பினருமான பபிதா போகத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, “எங்கள் வாழ்க்கை வரலாற்று கதையை படமாக எடுத்து அமீர் கான் 2000 கோடி சம்பாதித்தார். ஆனால் இதற்காக எங்கள் குடும்பத்திற்கு வெறும் 1 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது” என்று பபிதா போகத் தெரிவித்தார்.
