முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அதிமுக., ஆட்சி காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம்.தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் இவர், தஞ்சாவூர் மாவட்ட ஒரத்தநாடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
இந்நிலையில் ஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வீட்டில் 11 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை தி.நகரில் உள்ளது அவரது மகன் அலுவலகம், அசோக் நகரில் உள்ள அவரது மகன் வீடு, சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
2011-2016 ஆண்டு காலத்தில் அமைச்சராக இருந்தபோது முறைகேடாக சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டதைத்தொடர்ந்து, லஞ்சஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
