கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். அகில இந்திய ஊழியர் சங்கத்தின் 16-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிலுவையில் உள்ள டி.ஏ. பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மருத்துவபடி, மருத்துவ அலவன்ஸ் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 3-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்த வேண்டும். சென்னை ஊழியர் சொசைட்டி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 100 சதவீதம் மத்திய அரசே ஓய்வூதியம் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி, 5ஜி சேவையை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பி.எஸ்.என்.எல். அகில இந்திய ஓய்வூதியர் சங்க கிளை உதவி தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.. மாவட்ட உதவி செயலாளர் சுப்பையா, மாவட்ட உதவி தலைவர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய உதவி தலைவர் மோகன்தாஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க கிளை உதவி செயலாளர் பாலகிருஷ்ணன், ஓய்வூதியர் சங்க கிளை பொருளாளர் கிருஷ்ணன், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கிளை தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
