அதிமுகவில் நடிகை கவுதமிக்கு முக்கிய பொறுப்பு

நடிகை கவுதமி கடந்த பல ஆண்டுகளாக பாஜகவில் பணியாற்றி வந்தார். பின்னர் சில காரணங்களால் பாஜகவில் இருந்து கடந்த ஆண்டு விலகிய கவுதமி, கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரையும் மேற்கொண்டார். இதேபோல பாஜகவில் இருந்த தடா பெரியசாமி, கட்சியில் இருந்து விலகி அவரும் அதிமுகவில் ஐக்கியமானார்.
இந்த நிலையில் இருவருக்கும் அதிமுகவில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகை கவுதமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளராக தடா பெரியசாமி நியமனம் செய்யப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல அதிமுக சிறுபான்மையின நல பிரிவு துணை செயலாளராக பாத்திமா அலியும், விவசாய பிரிவு துணை செயலாளராக கள்ளக்குறிச்சியை சேர்ந்த சன்னியாசியும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதிமுகவும்,பாஜகவும் ஒருவருக்கொருவர் தற்போது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில் பாஜகவில் இருந்து வந்த கவுதமி, தடா பெரியசாமிக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
