பட்டாக்களை கிராமக்கணக்கில் பதிவேற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்துக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனி, கணேஷ் நகர் கிழக்குப்பகுதி, இந்திரா காலனி பகுதிகளில் வீடுகள் கட்டி குடியிருக்கும் மக்களுக்கு, வீடுகளின் பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டுகட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு தாலுகா செயலாளர் பாபு தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கரும்பன்,மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல்லையா,ரஞ்சனி கண்ணம்மா,நகர உதவிச் செயலாளர் அலாவுதீன், இளைஞர் பெருமன்ற நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் மற்றும் மந்தித்தோப்பு கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு கோஷமிட்டனர்.
தொடர்ந்து, அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்துக்குள், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மேஜை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் ரெயில்வே தனி வட்டாட்சியர் சுபாவிடம் வழங்கிய மனுவில் கூறி இருப்பதாவது:-‘
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்துக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் உள்ள மக்களுக்கு கடந்த ஆட்சியின்போது பட்டா வழங்கப்பட்டு, காலனி வீடுகளும் வழங்கப்பட்டன. ஆனால் அந்த பட்டாக்கள் கிராமக் கணக்கில் தற்போது வரை பதிவேற்றம் செய்யப்படவில்லை. தற்போது பல வீடுகள் சேதமடைந்துவிட்டன. அரசு நலத்திட்டங்களும் பெற முடியாமல் அப்பகுதி மக்கள் தவிக்கின்றனர்.
மேலும், அதே கிராமத்தில் கணேஷ் நகர் கிழக்குப்பகுதி, இந்திரா காலனி ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வரும் மக்களுக்கு, அவர்களது வீடுகளை அளவீடு செய்து கிராமக் கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.,
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வட்டாட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
