மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்: தேதியை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

இரு மாநில சட்டமன்றகளின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு, அங்கு தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. மஹாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்கண்டில் இரு கட்டமாகவும் சட்டமன்ற தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
மஹாராஷ்டிராவில் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும்., 82 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட்டில் 81 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும்.இங்குள்ள 82 தொகுதிகளில் ஒரு இடத்திற்கு நியமன உறுப்பினர் நியமிக்கப்படுவார். இந்த நிலையில் இரு மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறியதாவது:-
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளில் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதேபோன்று ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும். 2-வது கட்ட தேர்தல் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும்.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் இருமாநில சட்டமன்ற தேர்தல் வாக்குகளும் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அங்கு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
