கோவில்பட்டி போராட்டத்துக்கு, பயன்படாத அடிபம்பை தூக்கி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று போராட்டதில் ஈடுபட்டனர். தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டக்குழு உறுப்பினர் ரெங்கநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரஞ்சனி கண்ணம்மா,செல்லையா, இளைஞர் பெருமன்ற நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், சிபிஐ நகரத் துணைச் செயலாளர் அலாவுதீன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பயன்படாத அடிபம்பை கையோடு எடுத்து வந்து பார்வைக்கு வந்து இருந்தனர்,
தொடர்ந்து அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் அவர்கள் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:-
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாண்டவர்மங்கலம் ஊராட்சி காமராஜ் நகர் மேற்கு பகுதியில் உள்ள பி.ஆர்.எஸ். கார்டன் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
அப்பகுதியில் கழிவுநீர் சாக்கடை வசதியும் இல்லை. இதனால் மழைக்காலங்களில் நீர்வடிந்து செல்ல இடமில்லாமல் அப்பகுதியிலேயே தேங்கி வருகிறது. இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் வாறுகால் அமைத்து தர வேண்டும்.
இதே போல் ஊத்துப்பட்டி ஊராட்சி தெற்கு குமாரபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஆழ்துளை அடிபம்பு நீண்ட நாட்களாக பழுதாகி கிடக்கிறது. அதனை சீரமைத்து தர வேண்டும். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பழுதான அடிபம்பை உடனடியாக சரி செய்து தர வேண்டும், இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்.
