சாத்தான்குளம் அருகே கல்குவாரி பாறைகள் உடைப்பு நிறுத்தப்படுமா? அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் கலுங்கு விளை சாலையில் தனியார் சார்பில் கல்குவாரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு வெடிவைத்து பாறைகள் உடைக்கப் படுவதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சுவர்களில் விரிசல் ஏற்படுகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
இதனையடுத்து கல்குவாரியை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெடுங்குளத்தில் அப்பகுதியை சேர்ந்த 150க்கு மேற்பட்டோர் கண்ணீல் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கனிம வள உதவி இயக்குநர் கல்குவாரியை ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்து கலைந்து சென்றனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட கனிம வள உதவி இயக்குநர் பிரியா இன்று நெடுங்குளம் வருகை தந்து புகார் கூறப்பட்ட கல்குவாரியை பார்வையிட்டு அளவீடு பணிகளை மேற்கொண்டார். அப்போது சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் பிரஸ்சயா, கிராம நிர்வாக அலுவலர்கள் துரை, சுபாஷ், நில அளவையர் அழகுவேல், உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அப்போது கனிம வள உதவி இயக்குநர் பிரியா, ஆய்வு பணிகளை முடித்து ஒரு வாரம் கல்குவாரியை செயல்படாமல் நிறுத்தி வைப்பது எனவும், ஆய்வு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து கல்குவாரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக உறுதி அளித்தார்.
