அமெரிக்க பயணம் சாதனை பயணமாக அமைந்தது; சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின் பேட்டி

அமெரிக்காவில் 14 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பயணத்தை முடித்துக் கொண்டு சிகாகோ நகரில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக இன்று காலை சென்னை திரும்பினார்.
அவரை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் துரை முருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மேயர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்றனர்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்கா பயணம் வெற்றிகரமான பயணமாகவும், இன்னும் சொல்ல வேண்டுமானால் ஒரு சாதனைக்குரிய பயணமாகவும் அமைந்துள்ளது..
உலகின் புகழ் பெற்ற தலை சிறந்த 25 நிறுவனங்களுடன் நான் சந்திப்பை நடத்தி இருக்கிறேன். இந்த சந்திப்பின் போது சான்பிரான்சிஸ்கோ நகரில் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.
இந்த 19 ஒப்பந்தங்கள் மூலமாக 7,618 கோடி ரூபாய் முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 11 ஆயிரத்து 516 பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீடுகள் திருச்சி, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் என பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதெற்கெல்லாம் மகுடம் வைத்தது மாதிரி தமிழ்நாட்டில் 30 ஆண்டு காலமாக செயல்பட்டு, தவிர்க்க இயலாத காரணத்தால் சில சூழ்நிலைகளால் உற்பத்தியை நிறுத்திய போர்டு நிறுவனம், எங்கள் வேண்டுகோளை ஏற்று சென்னை மறை மலைநகரில் இருக்கக் கூடிய தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளது.
தமிழ்நாட்டின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், இந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்று, அவர்கள் உற்பத்தியை தொடங்குவதற்கான எல்லா உதவிகளையும் வழங்குவதற்கு நான் ஆணையிட்டுள்ளேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
