இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட மறவன் காலனி, தாமஸ் நகர் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது.
கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு கிளை செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் கரும்பன், நகரச் செயலாளர் சரோஜா, தாலுகாச் செயலாளர் பாபு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தில், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பரமராஜ், ரஞ்சனிகண்ணம்மா, இளைஞர் பெருமன்ற நகரச் செயலாளர் செந்தில்ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் பயிற்சி கோட்டாட்சியர் சத்யாவிடம் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:-
:கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட மறவர்காலனி, தாமஸ் நகர் பகுதியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட மக்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இவர்கள் முறையாக வீட்டுத்தீர்வை செலுத்துகின்றனர். மின்இணைப்பும் வழங்கப்பபட்டுள்ளது, ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை. எனவே, இப்பகுதி மக்களுக்கு முறையாக அளவீடு செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கி, அதனை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
