ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் விலைக்கு வாங்கி கடத்த முயன்ற 2 பேர் கைது

கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜீவ் நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த வாகனத்தை சோதனையிட்ட போது 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வாகனத்தில் இருந்த கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்த முத்து மாரியப்பன் மற்றும் சிவசங்கர் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அப்பகுதியில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி வெளியூருக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து சுமார் 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.
