தூத்துக்குடி- பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டிகள் ; பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்

பாலக்காடு- நெல்லை இடையே இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி கடந்த 15-ந் தேதி முதல் தூத்துக்குடி வரை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இந்த ரெயிலில் தற்போது மூன்றடுக்கு 5 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 11 பொது பெட்டிகளும், 2 சரக்கு பெட்டிகளும் என 18 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் நீண்டதூர விரைவு ரெயில் என்பதாலும், பயண நேரம் 14 மணி நேரத்துக்கு மேலாவதாலும் ஏ.சி பெட்டிகள் இல்லாதது பெரும் குறையாக பயணிகள் கருதுகின்றனர். எனவே, பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் மா.பிரம்மநாயகம் தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், “பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டு சிறப்பாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் முன்பதிவு பெட்டிகளில் தினமும் முழுமையாக பயணிகள் பயணிக்கின்றனர். இந்த ரெயிலில் ஏ.சி. பெட்டிகள் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது.
ஆகையால் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு மூன்றடுக்கு ஏ.சி பெட்டியும், ஒரு இரண்டடுக்கு ஏ.சி பெட்டியும் இணைக்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலருவி ரெயில் நீட்டிக்கப்பட்டதால், ரத்து செய்யப்பட்ட நெல்லை-தூத்துக்குடி பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.
