கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 5.30 மணிக்கு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி ஆகிய பூஜைகள் நடந்தன. காலை 8 மணிக்கு விளா பூஜை, பகல் 11.30 உச்சி கால பூஜை ஆகியவை நடந்தது.
பின்னர் மாலை 4.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. 5 மணிக்கு மூலவர் செண்பகவல்லி அம்மனுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு, மடியில் பாசிப்பயறு கட்டப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜைகள் சுரேந்தர் பட்டர் தலைமையிலான பட்டர்கள் செய்திருந்தனர்.
இதையொட்டி மழையையும் பொருட்படுத்தாமல் மாலை 2.30 மணி முதல் கோவில் முன்பு பக்தர்கள் காத்திருந்தனர். நடை திறந்த பின்னர் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அறங்காவலர் குழுத்தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு, உறுப்பினர்கள் திருப்பதி ராஜா, சண்முகராஜ், நிறுத்திய லட்சுமி, ரவீந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு வளையல்கள் மற்றும் மங்கல பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலைப்பிரியா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
