ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடி மாதம் ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரத்திருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் – ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் 16 வண்டி சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து நாள்தோறும் ஆண்டாள் வீதி உலா வருகிறார். வருகிற 3-ந்தேதி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 5-ந்தேதி அன்று ஆண்டாள்-ரெங்கமன்னார் சயன சேவை நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந்தேதி தேரோட்ட திருவிழா நடைபெறும்.
