கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசு கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை எழும்பூர் ராஜாராத்தினம் ஸ்டேடியம் அருகில் அ. தி. மு. க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை 9 மணிமுதல் அடையாள உண்ணா விரத அறப்போராட்டம் தொடங்கினார்கள். மாலை 5 மணி வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.



எந்த விதமான கோஷமும் எழுப்பாமல் அமைதி வழியில் நடந்த போராட்டத்தில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், உள்ளாட்சி ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் குறித்து அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவத்துக்கு சி பி சி ஏ டி விசாரணை சரிவராது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி போலீசார் விசாரணையில் நியாயம் இருக்காது.
ஒரு நபர் கமிஷன் என்பதும் கண்துடைப்பு தான். எனவே தான் சிபிஐ விசாரணை கேட்கிறோம். சட்டசபையில் இது பற்றி பேசுவதற்குசபாநாயகர் அனுமதி தருவதில்லை.எனவே மக்கள் நீதிமன்றம் மூலம் எங்கள் கோரிக்கையைசொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.
