கவர்னருடன் பேசியது என்ன?அண்ணாமலை விளக்கம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அவருடன் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சென்று இருந்தனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான ஊரில் நேரில் பார்வையிட்டது பற்றி கவர்னரிடம் அண்ணாமலை விளக்கி கூறினார். மேலும் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் வரை பலியாகி இருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து சி,பி.ஐ.விசாரணை வேண்டும் என்று கோரி மனு அளித்தார்.
கவர்னரை சந்தித்த பிறகு அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் பெருகியிருக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது
திமுக அரசின் இந்த அஜாக்கிரதையால், கள்ளக்குறிச்சியில் 60 உயிர்களை, கள்ளச்சாராயத்துக்குப் பறிகொடுத்துள்ளோம். கள்ளச்சாராய விற்பனையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி, இன்று தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் இணைந்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தோம்.
மேலும், இத்தனை உயிர்கள் பலியான பின்னரும், இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறையின் அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பதும், பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உடனடியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முதல்-அமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்றும் கவர்னரை கேட்டுக்கொண்டோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
