பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த டாக்டர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் டாக்டர் சுரேஷ் ஹெர்பெர்ட் (வயது 53).இவர் திண்டுக்கல் ராஜக்காபட்டியில் வடமலையான் மருத்துவமனையில் சில மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.
இவர் அதே பகுதியில் ராஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 8 மாதமாக வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவர் மனைவியை பிரிந்து தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று டாக்டர் சுரேஷ் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் ஏட்டு சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
டாக்டர் சுரேஷ் தங்கியிருந்த வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து வருவாய்த் துறையினர் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே போலீசார் சென்றனர்.
அங்கு டாக்டர் சுரேஷ் ஹெர்பெர்ட் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது..
அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்குள் சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். பிணமாக கிடந்த டாக்டர் உடல் அருகே மது பாட்டில் மற்றும் மது அருந்திய டம்ளர் ஆகியவை இருந்தது. டாக்டர் சுரேஷ் வீட்டை உள் பக்கமாக பூட்டி விட்டு மது குடித்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இவரது மகன் வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாக்டர் சுரேஷ் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
