கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்- போலீஸ் சூப்பிரண்டு சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். பல முறை சிறை சென்றுள்ள இவர் மீண்டும் மீண்டும் கள்ளச்சாராய விற்பனையை தொடர்ந்து நடத்தி வந்தார்.
மதுபானங்கள் விலை அதிகம் என்பதால், கருணாபுரம் பகுதியை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயத்தை தேடி வந்து குடிக்க தொடங்கினார்கள்
இந்த நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் 80 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இதில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய 5 பேர் இன்று காலை இறந்து போனார்கள்
14 பேர் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்றவர்களில் 3 பேர் பலியாகினர். தொடர்ந்து உயிர் பலி என்பது அதிகரித்து வருகிறது. மேலும் 10 பேர் பலியானதை தொடர்ந்து இன்று இரவு 9 மணி நிலவரப்படி மொத்த பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் புதிய நபர்கள் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 80 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் அதில் 10 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சி அருகே நடந்துள்ள கள்ளச்சாராய சாவு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்தது எப்படி என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாராயம் விற்பனை செய்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
