மனு அளித்து ஓராண்டு ஆகியும் நடவடிக்கை இல்லை”-ஜமாபந்தி அதிகாரிகளை கண்டித்து த. மா.கா. உள்ளிருப்பு போராட்டம்


கோவில்பட்டி நகராட்சி வார்டு எண் 23, 24க்கு உட்பட்ட கடலையூர் ரோடு , வள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு வள்ளுவர் நகர் பகுதியில் சர்வே எண் 513-ல் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பதில் ஒரு சில நபர்களுக்குள் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு அப்போதைய வட்டாட்சியரால், சர்வே எண் 513 முழுவதும் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்து சார்பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவு பிறப்பித்து அமலில் உள்ளது.
அதன் காரணமாக அப்பகுதி மக்கள் தங்களது நிலங்கள், குடியிருப்புகளை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அரசு உதவி பெறுவதில் பல இடர்பாடுகள் உள்ளன.
எனவே, தடை உத்தரவை ரத்து செய்து சர்வே எண் 513-ல் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு அனுமதி அளித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கடந்த ஆண்டு கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த ஜமாபந்தியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்டது. இதில் வழங்கப்படும் மனுக்கள் மீது 7 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்பது விதி. ஆனால், மனு வழங்கி ஒரு ஆண்டை கடந்து விட்டதால் ஜமாபந்தியை நடத்தும் அதிகாரிகளை கண்டித்தும், கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு கோவில்பட்டி நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விநாயகரிடம் மனு வழங்கும் போராட்டம் கடந்த வாரம் நடத்தப்பட்டது.
இந்த பிரச்சினைக்கு 17-ம் தேதிக்குள் தீர்வு காணாவிட்டால், 18-ம் தேதி (இன்று) ஜமாபந்தி அதிகாரிகளை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே
பி. ராஜகோபால் அறிவித்திருந்தார்.
அதன்படி அவரது தலைமையில் இன்று கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலர் கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது
இந்தப் பிரச்சினையில் அரசு மூலம்உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு காலதாமதம் ஆனாலும் நடவடிக்கை எடுப்பது உறுதி என்று அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதன் அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரசார் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
இது பற்றி கே.பி. ராஜகோபால் கூறுகையில், ” அடுத்ததாக இந்த பிரச்சனை தொடர்பாக மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காண முயற்சி மேற்கொள்வேன் ” என்று தெரிவித்தார்
