ரேஷன் கடையில் பொருட்கள் எடை குறைவு புகார்: சமாதான கூட்டத்தை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு போராட்டம் கைவிடப்பட்டது

கோவில்பட்டி வட்டம் இளையரசனேந்தல் கிராமத்தில் உள்ள ரேஷன்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சீனி, கோதுமை போன்ற பொருட்கள் எடைகுறைவாக இருப்பது,பொதுமக்களை அவதூறாக பேசுவது ஆகியவற்றை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று 19-ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது..
இதுதொடர்பான சமாதானகூட்டம் நேற்று மாலை கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. வட்டாட்சியர் சரவணபெருமாள் தலைமை தாங்கினார். வட்டவழங்கல்அலுவலர் பாண்டியராஜன், இந்தியகம்யூனிஸ்ட் தாலுகாசெயலாளர் பாபு,மாவட்டக்குழு உறுப்பினர்கள் சேதுராமலிங்கம், ரஞ்சனி, கண்ணம்மா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில்,இளையரசனேந்தல் கிராமத்தில்உள்ள ரேஷன்கடையின் விற்பனையாரை ஒரு வாரத்துக்குள் பணியிட மாற்றம் செய்யப்படும்.அந்த கடைக்கு புதிதாக எடையாளரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட இந்தியகம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று நடைபெறஇருந்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ரேஷன் கடைகளில் துவரம்பருப்பு சப்ளை இல்லாததால் விநியோகம் இல்லாமல் இருந்தது. பின்னர் இரண்டு மாதங்களுக்கு சேர்த்து துவரம்பருப்பு விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் குறிப்பிட்டபடி துவரம்பருப்பு விநியோகம் செய்யபப்டவில்லை. மூன்றாவது மாதமாக இந்த மாதமும் துவரம்பருப்பு இல்லை என்றே ரேஷன் கடைகளில் சொல்லபப்டுகிறது. மேலும் பாமாயில் இருப்பு இல்லை என்றும் ரேஷன் கடை பணியாளர்கள் கூறி வருகிறார்கள்.
எனவே இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
